

புதுடெல்லி,
இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் தடவையாகும்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது, இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்துக்களை கூறினார். மேலும், தனது அழைப்பை ஏற்று, இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடத்த ஒப்புதல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி,
இந்தியா - இலங்கை இடையேயான உறவுகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அண்டை நாட்டுக்கு முதல் முன்னுரிமை என்ற கொள்கையின் படியும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய கோட்பாட்டின் படியும் எங்கள் அரசு, இலங்கை அரசுடனான உறவுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய இலங்கை பிரதமர் ராஜபக்சே, கொரோனா பெருந்தொற்று சூழலில், பிற நாடுகளுக்காகவும் இந்தியா செயலாற்றியதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.எம்.டி நியூ டைமண்ட் கப்பலில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி, இரு நாடுகளுக்கும் இடையேயான பெரும் ஒத்துழைப்பு வழங்குவதற்கான வாய்ப்பாக அமைந்தது என்றார்.