அணு ஆயுதம் கொண்டு பாகிஸ்தான் தாக்கினால்... பரூக் அப்துல்லா பதில்
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது, பாதுகாப்பு மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடனான பிரதமர் மோடியின் சந்திப்பு பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், பிரதமருக்கு எங்களுடைய முழு அளவிலான ஆதரவை தெரிவித்து உள்ளோம். என்ன செய்ய வேண்டுமோ அதனை பிரதமர் செய்ய வேண்டும் என கூறினார்.
பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல் பற்றி கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர், நம்மிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. வாஜ்பாயுடன் பொக்ரானுக்கு நான் சென்றபோது, எவரேனும் முதலில் எங்களை தாக்காதவரை அணு ஆயுதங்களை நாங்கள் ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என கூறியிருந்தோம்.
முதலில், இந்தியா எவர் மீதும் தாக்குதல் நடத்தியது இல்லை. நாம் எப்போதும் பதிலடியே கொடுத்துள்ளோம். இன்றும் அணு ஆயுதங்களை நாம் பயன்படுத்தமாட்டோம். அவர்கள் (பாகிஸ்தான்) அவற்றை பயன்படுத்த விரும்பினால், எங்களிடமும் அந்த ஆயுதங்கள் உள்ளன. ஆனால் அது நடக்க கூடாது என்று பதிலளித்து உள்ளார்.

