தேர்வில் சாட் ஜி.பி.டி. மூலம் காப்பியடித்தபோது சிக்கிய மும்பை ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை

மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐ.ஐ.டி. மாணவர்
Published on

தேர்வில் சாட் ஜி.பி.டி. மூலம் காப்பியடித்த போது சிக்கிய மும்பை ஐ.ஐ.டி. மாணவர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் புகழ்பெற்ற உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனமான மும்பை ஐ.ஐ.டி. பவாய் பகுதியில் உள்ளது. இங்கு மராட்டியத்தின் யவத்மால் பகுதியை சேர்ந்த சாகில் வகோடே (வயது22) என்ற மாணவர் பி.டெக். ஆற்றல் அறிவியல் மற்றும் பொறியியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் தேர்வு நடந்துள்ளது. இதில் மாணவர் சாகில் வகோடே செல்போனுடன் சிக்கி உள்ளார். அவர் சாட் ஜி.பி.டி.யில் வினாத்தாள்களை பதிவேற்றம் செய்து விடைகளை பெற்றதாக கூறப்படுகிறது.

சக மாணவர்கள்

தேர்வில் காப்பி அடித்தபோது சிக்கிக்கொண்டதால் மாணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்தநிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதிக்கு சென்ற மாணவர் வெகுநேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மாணவர்கள் மாலை வேளையில் அறையை திறந்து பார்த்தனர்.அப்போது மாணவர் சாகில் வகோடே தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

மாணவர்கள் போராட்டம்

இந்தநிலையில் மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் மாணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு கல்லூரி வளாகத்தில் இரவு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தேர்வு பொறுப்பாளர், ஐ.ஐ.டி. இயக்குனர், ஆற்றல் அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர்கள் ராஜினாமா செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனால் மும்பை ஐ.ஐ.டி.யில் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டம் காரணமாக மும்பை ஐ.ஐ.டி.யில் நடந்து வந்த செமஸ்டர் தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே மாணவர் தற்கொலை தொடர்பாக பவாய் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த மாணவரின் தாய் நிருபர்களிடம் கூறுகையில், "என் மகன் தற்கொலை செய்யவில்லை. அவன் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளான். எனக்கு நீதி வேண்டும்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com