

புது டெல்லி,
டெல்லி தேசிய விலங்கியல் பூங்காவில் ஆசிய பெண் சிங்கம் ‘மகாகௌரி’ ஒரே பிரசவத்தில் 3 குட்டிகளை பெற்றெடுத்துள்ளது. இதன் மூலம் பூங்காவில் சிங்கங்களின் கர்ஜனை மீண்டும் புதுப்பொலிவுடன் ஒலிக்க தொடங்கியுள்ளது.
இதுகுறித்து டெல்லி தேசிய விலங்கியல் பூங்கா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பூங்காவில் உள்ள ஆசிய சிங்க ஜோடியான மகாகௌரி மற்றும் மகேஷ்வருக்கு கடந்த ஜூலை 7, 2026 அன்று இந்த 3 குட்டிகளும் பிறந்துள்ளன. கடந்த ஆண்டும் (ஏப்ரல் 2025) இந்த ஜோடிக்கு ஐந்து குட்டிகள் பிறந்து, அவற்றில் 'கார்த்திக்', 'கர்ணி' ஆகிய இரண்டு குட்டிகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருகின்றன.
பிரசவித்த வெறும் 15 மாதங்களுக்குள் மகாகௌரி மீண்டும் வெற்றிகரமாக கருத்தரித்து குட்டிகளை ஈன்றிருப்பது பூங்காவின் இனப்பெருக்க பாதுகாப்பு திட்டத்தில் ஒரு மிகப்பெரிய அரிய சாதனையாக கருதப்படுகிறது.
புதிதாக பிறந்துள்ள 3 குட்டிகளும், தாய் மகாகௌரியும் தற்போது பூங்காவின் பிரத்யேக பிரசவ கூண்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். குட்டிகளின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு எவ்வித இடையூறும் இல்லாத அமைதியான சூழல் அவசியம் என்பதால், மருத்துவர்கள் மற்றும் விலங்கு பராமரிப்பு குழுவினர் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் அவற்றின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த 3 புதிய குட்டிகளின் பிறப்பிற்கு பிறகு பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது இந்த பூங்காவில் சுந்தரம், மகேஷ்வர், கார்த்திக் ஆகிய 3 ஆண் சிங்கங்களும், மகாகௌரி, சைலஜா, கர்ணி ஆகிய 3 பெண் சிங்கங்களும் என மொத்தம் 6 முதிர்ந்த சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அழிந்து வரும் ஆபத்தில் இருக்கும் ஆசிய சிங்க இனத்தை பெருக்குவதற்காக எடுக்கப்பட்ட இந்த முயற்சிகளின் தொடர் வெற்றி, வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பூங்கா ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.