

புதுடெல்லி,
சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், நாட்டில் இதுவரை ஏற்பட்ட கொரோனா மரணங்களில் 48 சதவீதம், 8 மாநிலங்களுக்கு உட்பட்ட 25 மாவட்டங்களை சேர்ந்தவை ஆகும். இதில் மராட்டியத்தில் மட்டுமே 15 மாவட்டங்கள் அடங்கியுள்ளன. அடுத்ததாக கர்நாடகா, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா 2 மாவட்டங்களும், தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திராவில் தலா ஒரு மாவட்டமும் உள்ளன. இந்தியாவின் கொரோனா சாத்திய விகிதம் 9.21-ல் (செப்டம்பர் 16-22 வரை) இருந்து 6.82 ஆக (செப்டம்பர் 30-அக்டோபர் 6) குறைந்திருக்கிறது என்று கூறினார்.
கடந்த 2 வாரங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரை விட, புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறிய பூஷண், 2 வாரங்களாக புதிய தொற்று 90 ஆயிரத்துக்கு கீழே சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
கொரோனா பணியில் உயிரிழந்த சுகாதார ஊழியர்களுக்கான ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் தொகை இதுவரை 95 பேருக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும், 176 பேருக்கு பரிசீலனையில் இருப்பதாகவும், 79 பேருக்கு இன்னும் வர வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.