

போபால்,
இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்த பெண் சிறுத்தையான 'கே.ஜி.பி.12', மத்திய பிரதேச மாநிலம் சியோபூரில் உள்ள பிரசித்தி பெற்ற கூனோ தேசிய பூங்காவில் 4 அழகிய குட்டிகளை ஈன்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் பிறந்து வளர்ந்த பெண் சிறுத்தைகளில் 'முகி' என்ற சிறுத்தைக்கு அடுத்தபடியாக குட்டிகளை ஈன்ற இரண்டாவது சிறுத்தை கே.ஜி.பி.12 ஆகும்.
தற்போது அந்த தாய் சிறுத்தை, தனது 4 குட்டிகளுடன் பாச போராட்டத்துடன் ஓய்வெடுக்கும் காட்சிகள் வனத்துறையினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் சிறுத்தைகளின் இனத்தை பெருக்கும் 'புராஜெக்ட் சீட்டா' திட்டத்தின் கீழ், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன. அதில், இந்தியாவில் பிறந்த பெண் சிறுத்தை ஒன்று குட்டிகளை ஈன்றிருப்பது இதுவே முதல்முறை என வனத்துறை அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்திய மண்ணில் சிறுத்தைகளின் மறுவாழ்வு திட்டம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்வதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
புதிதாக பிறந்துள்ள 4 குட்டிகளும், தாய் சிறுத்தை கே.ஜி.பி.12-ம் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. குட்டிகளின் பாதுகாப்பைக் கருதி, அந்த பகுதி முழுவதும் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் அதிநவீன கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தாய் சிறுத்தைக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளும் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே ஆப்பிரிக்காவில் இருந்து வந்த சிறுத்தைகள் குட்டிகளை ஈன்றிருந்த நிலையில், தற்போது இந்திய மண்ணிலேயே பிறந்த சிறுத்தையும் 4 குட்டிகளை பெற்றெடுத்துள்ளதால், கூனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த குட்டிகளின் வரவு, பூங்கா ஊழியர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பண்டிகை போன்ற கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.