

லக்னோ,
இந்தியா தன்னுடைய மண்ணில் உள்ள எதிரிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த முடியும் என்பதையும், தேவைப்பட்டால் வெளிநாட்டிலும் எதிரிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தமுடியும் என்பதையும் நடத்திக் காட்டிவிட்டது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.
பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறிய தாக்குதல்களை அவ்வபோது நடத்தி வருகிறது. சமீபத்தில் பூஞ்ச் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியது. இதற்கு பதிலடியை இந்திய ராணுவம் எல்லையை தாண்டி சென்று கொடுத்தது. பாகிஸ்தான் நிலைகள் துவம்சம் செய்யப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த 6 வீரர்கள் உயிரிழந்தனர் என கூறப்பட்டது. இதனையடுத்து எல்லையில் மோதல் அதிகரித்து காணப்படுகிறது. இந்திய எல்லை கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் அடாவடியாக தாக்குதலை நடத்திவருகிறது. இதனால் எல்லையில் மீண்டும் பதட்டமான நிலை அதிகரித்து காணப்படுகிறது. கிராம மக்கள் பத்திரமாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் லக்னோவில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், சில மாதங்களுக்கு முன்னதாக பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்திய ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தினர். 17 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பிரதமர் மோடி எங்களிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்கு சென்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது. உலக அரங்கில் இந்தியா வலிமையான நாடு என்ற நிலை உருவாகி உள்ளது. இந்தியா தன்னுடைய மண்ணில் உள்ள எதிரிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த முடியும் என்பதையும், தேவைப்பட்டால் வெளிநாட்டிலும் எதிரிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தமுடியும் என்பதையும் உலகிற்கு தெரியபடுத்தி உள்ளது. இந்தியா தன்னுடைய வலிமையை மேலும் வலுப்படுத்தி உள்ளது, என கூறிஉள்ளார்.