

புதுடெல்லி,
உலகளாவிய முதலீட்டு பாதுகாப்பு நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியா 104-வது இடத்தில் பின்தங்கியுள்ளது.
உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை எந்த நாடுகளில் பாதுகாப்பாக முதலீடு செய்ய முடியும்? என்பதை அறிந்து கொள்வதற்காக லண்டனை தலைமையாக கொண்டு செயல்படும் 'ஹென்லி அன்ட் பார்ட்னர்ஸ்' நிறுவனம் 'ஆல்பா ஜியோ' என்ற உலகளாவிய தரவு ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து 'உலக ளாவிய முதலீட்டு அபாயம் மற்றும் பின்னடைவு குறியீட்டை' உருவாக்கி வெளியிட்டு இருக்கிறது. அந்தவகையில் 2026-ம் ஆண்டுக்கான பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பொதுவாக ஒரு நாட்டில் முதலீடு செய்யும்போது அங்கு கிடைக்கும் லாபத்தை மட்டுமே பலரும் பார்ப்பார்கள். ஆனால் இந்த குறியீடு லாபத்தை கணக்கிடாமல், பொருளதார அதிர்வில் இருந்து அந்த நாட்டு எவ்வளவு வேகமாக மீண்டு முதலீட்டாளர்களின் மூலதனத்தை பாதுகாக்கும் திறனை ஆராய்ந்து பட்டியலிடுகிறது.
அதன்படி, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நிர்வாகம், பொருளாதார நெகிழ்வுத்தன்மை, நாட்டின் பணமதிப்பு, நிதிக்கொள்கைகள், புவிசார் அரசியல் பாதுகாப்பு ஆகிய 5 காரணிகளை ஆராய்ந்து 100 புள்ளிகளுக்கு இந்த மதிப்பீடு கணக்கிடப்படுகிறது.
அதன்படி, 2026-ம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் முதலிடத்தில் சுவிட்சர்லாந்து நாடு (88.4 புள்ளிகள்) இடம்பெற்றிருக்கிறது. அதற்கடுத்ததாக டென் மார்க், நார்வே, சிங்கப்பூர், சுவீடன் போன்ற நாடுகள் வருகின்றன. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் 9 இடங்களை ஐரோப்பிய நாடுகளே தக்க வைத்திருக்கின்றன. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவே இந்த பட்டியலில் 24-வது இடத்தில்தான் (73 புள்ளிகள்) உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், இந்த பட்டியலில் 104-வது இடத்துக்கு (54.4 புள்ளிகள்) தள்ளப்பட்டிருக்கிறது.
முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பைக் கணக்கிடும்போது பணவீக்க சவால்கள், பண மதிப்பின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் சில ஒழுங்குமுறை மற்றும் சட்ட நடைமுறைகளில் உள்ள காலதாமதங்கள் போன்ற காரணிகளால் இந்தியாவின் தரவரிசைப்புள்ளி பின்தங்கியுள்ளது.