

புதுடெல்லி,
இன்று காலை 11 மணிக்கு, இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார். அதன்பின் அந்த நிகழ்ச்சியில் பேசியதை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய விண்வெளி சங்கம் குறித்து பிரதமர் அலுவலகம், விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்களின் முதன்மையான தொழில் சங்கமாகவும், இந்திய விண்வெளித் துறையின் கூட்டு குரலாகவும் இருக்க போகிறது என்று தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் லார்சன் அண்ட் டூப்ரோ, நெல்கோ (டாடா குழுமம்), ஒன்வெப், பாரதி ஏர்டெல், மேப்மைண்டியா, வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அனந்த் டெக்னாலஜி லிமிடெட் ஆகியவை அடங்கும். மற்ற முக்கிய உறுப்பினர்களில் கோட்ரெஜ், ஹியூஸ் இந்தியா, அசிஸ்டா-பிஎஸ்டி ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், பிஇஎல், சென்டம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மேக்சர் இந்தியா ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பல செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. இருந்தாலும் கொரோனா காரணமாக சில விண்வெளி பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.
மூத்த இஸ்ரோ அதிகாரிகளின் கூற்றுப்படி, கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட நாட்டின் முதல் சோலார் மிஷன், 2022 ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்படும் என்றும் ககன்யான் திட்டத்தின் கீழ் முதல் ஆளில்லா விமான திட்டம் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஆய்வு மையமான எக்ஸ்போஸாட்டுக்கான பணிகள் அடுத்த வருடம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.