

புதுடெல்லி,
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று அ ரியானாவில் தொடங்கிவைக்கிறார்.
இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரெயில் என்ஜினை தயாரிக்க கடந்த 2022-ம் ஆண்டு முயற்சிகள் தொடங்கின.
கடந்த 2020-21-ம் ஆண்டில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரயில்வே இந்தத் திட்டத்தை 2022, ஏப்ரலில் தொடங்கியது. இந்தத் திட்டத்துக்கான டெண்டர் ஐதராபாத்தைச் சேர்ந்த மேதா என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம்தான் எரிபொருட்களை சப்ளை செய்கிறது.
ஹைட்ரஜன் ரெயிலை வடிவமைக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்றன. பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடந்தன. இதையடுத்து, ரெயிலை அறிமுகப்படுத்த கடந்த மே மாதம் 22-ம் தேதி ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இந்தநிலையில், ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நாட்டின் முதல் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
பன்முக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த ரெயில், அரியாணா மாநிலம், ஜிந்த் - சோனிபட் இடையே இயக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் தூய எரிசக்திக்கு மாறும் இந்தியாவின் லட்சியப் பயணம் மற்றும் நிலையான -பசுமையான ரெயில் போக்குவரத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்குகிறது எனலாம்.
சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத இந்த ரெயில், டீசலுக்குப் பதிலாக ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்குவதால் புகைக்குப் பதில் வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றும் என கூறப்படுகிறது