நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானம்: பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு

விமானம் மூன்று முறை வானில் வட்டமிட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறங்கியது.
பாட்னா,
தலைநகர் டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு நேற்றிரவு இண்டிகோ விமானம் 6E 2482, 173 பயணிகளுடன் புறப்பட்டது. பாட்னா விமான நிலையத்தின் ரன்வேயில் ஓடுபாதையில் தரையிறங்கும் இடத்துக்கு முன்பே விமானம் தரையிறங்கியுள்ளது. மீதமுள்ள ஓடுபாதையின் நீளம் விமானத்தை நிறுத்துவதற்கு போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த விமானிகள், உடனடியாக விமானத்தை மீண்டும் டேக் ஆப் செய்தனர்.
பின்னர், விமானம் மூன்று முறை வானில் வட்டமிட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறங்கியது. இதனால், விமானத்தில் இருந்த 173 பயணிகளும் நூழிலையில் உயிர் தப்பினர். விமானிகளின் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சமயோசித முடிவு, விமானம் விபத்திலிருந்து தப்புவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக, பாட்னா விமான நிலையத்தின் ஓடுபாதை பிற விமானங்களின் ஓடுபாதையுடன் ஒப்பிடும் போது குறுகிய தூரமுடையது என்பது கவனிக்கத்தக்கது.






