காது குத்த மயக்க ஊசியா..? 6 மாதக் குழந்தை உயிரிழந்த பரிதாபம்


காது குத்த மயக்க ஊசியா..? 6 மாதக் குழந்தை உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 4 Feb 2025 2:28 PM IST (Updated: 4 Feb 2025 6:14 PM IST)
t-max-icont-min-icon

வலியை குறைக்க நினைத்து செலுத்தப்பட்ட மயக்க ஊசி, குழந்தையின் உயிரை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாம்ராஜ்நகர் (கர்நாடகா),

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹங்கலா கிராமத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் சுபா தம்பதியருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு காது குத்த முடிவு செய்த தம்பதியர் காதணி விழா நடத்த திட்டமிட்டனர்.

இதனிடையே காது குத்தும்போது குழந்தைக்கு காது வலிக்காமல் இருப்பதற்காக மயக்க ஊசி போட அவர்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்தின் டாக்டராக பணியாற்றும் நாகராஜ் என்பவர் குழந்தைக்கு இரு காதுகளிலும் மயக்க மருந்து (அனஸ்தீசியா) ஊசி செலுத்தி உள்ளார்.

இதற்காக டாக்டர் ரூ. 200 கட்டணமாக வசூலித்துள்ளார். குழந்தைக்கு வீரியம் அதிகமான மயக்க ஊசியை போட்டதால் குழந்தையின் வாயில் இருந்து நுரை வந்துள்ளது. மேலும் அந்த சிறிது நேரத்தில் மயங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தையை மாவட்ட அரசு தலைமை மருந்துவமனைக்கு உடனடியாக அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் டாக்டர் நாகராஜ் செலுத்திய ஊசியே மரணத்திற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் சம்பந்தப்பட்ட டாக்டரை பணிநீக்கம் செய்து தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த தாலுகா சுகாதார அதிகாரி டாக்டர் அலீம் பாஷா கூறுகையில், "காது குத்தும்போது வலி ஏற்படாமல் இருக்க டாக்டர் மயக்க மருந்து கொடுத்துள்ளார். பின்னர் குழந்தை வலிப்பு ஏற்பட்டு இறந்தது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும். டாக்டரின் அலட்சியம் உறுதிசெய்யப்பட்டால், நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

காது குத்துவதற்காக மயக்க ஊசி போட்டதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story