கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

பெங்களூரு,

தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கர்நாடகத்தில் உள்ள கபினி அணியில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கனமழை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு மின்னல் வேகத்தில் எகிறியுள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கடந்த 31ம் தேதி வரை சீராக இருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக அதிரடியாக உயர்ந்தது. அணை மிக வேகமாக நிரம்பி வருவதால், அதன் பாதுகாப்பை வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

நீர் திறப்பு அதிகரிப்பு

கடல் மட்டத்தில் 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அந்த அணையின் நீர்மட்டம் 2,282 அடியாக இருந்தது. அதாவது இந்த அணையில் 19.52 டி.எம்.சி. நீர் தேக்கி வைக்க முடியும். நேற்றைய நிலவரப்படி அணையில் 18.21 டி.எம்.சி. நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 31,746 கன அடி வரை வந்து கொண்டிருந்தது. நேற்று 25 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 27 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரித்துள்ளது. இன்று மாலைக்குள் காவிரி நீர் தமிழ்நாடு எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com