

புதுடெல்லி,
பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் கிழிந்து போவதால், அதற்குப் பதிலாக அதிக ஆயுட்காலம் கொண்ட பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வருகிற 30-ந் தேதி முதல் அறிமுகமாக உள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே தேவையில்லாத பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எனவே, காகித நோட்டுகள் செல்லாது என்று பரவும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.