

விக்டோரியா,
பிரதமர் நரேந்திர மோடி, செஷெல்ஸ் நாட்டுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இதன் மூலம், அந்நாட்டு செஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.செஷெல்ஸ் தேசிய சட்டப்பேரவையின் 8-வது அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியப் பெருங்கடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், அப்பகுதியில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.
"இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் செஷெல்ஸையும் பிரிப்பதில்லை; மாறாக இரு நாடுகளையும் இணைக்கிறது. கடல்சார் அண்டை நாடுகளாகிய நாம், ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றொரு நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது என்பதை உணர்ந்துள்ளோம். ஒரு நாட்டின் வளம் மற்றொரு நாட்டின் வளத்திற்கும் பங்களிக்கிறது. பிராந்தியத்தின் நிலைத்தன்மை அனைவருக்கும் நன்மை பயக்கும்.கடல்சார் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, பாதுகாப்பான மற்றும் நிலையான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை உருவாக்கும் எங்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.50 ஆண்டுகளுக்கு முன்பு, செஷெல்ஸ் சுதந்திரம் பெற்றபோது, இந்தியாவின் நட்பு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். நீலகிரி கப்பல் போர்ட் விக்டோரியாவில் நங்கூரமிட்டிருந்தது. இன்று, உங்கள் நாட்டின் பொன்விழா சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில், ஐ.என்.எஸ். இக்ஷாக் மற்றும் ஐ.என்.எஸ். தர்காஷ் கப்பல்கள் போர்ட் விக்டோரியாவில் நிறுத்தப்பட்டுள்ளன. ஐந்து தசாப்தங்கள் கடந்தாலும், செஷெல்ஸ் மீதான இந்தியாவின் அர்ப்பணிப்பு மாறவில்லை.
2015-ஆம் ஆண்டு பிரதமரான பிறகு நான் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதன்முதலாக பயணம் மேற்கொண்ட நாடு செஷெல்ஸ். இந்தியாவின் இந்தியப் பெருங்கடல் பார்வையில் செஷெல்ஸ் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதாக நான் நம்பியதால் இங்கு வந்தேன். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கு வந்துள்ள இந்த நேரத்தில், அந்த நம்பிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது. உங்கள் நாட்டின் சுதந்திரத்தின் 50-வது ஆண்டு விழாவில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். மேலும், இந்தியா-செஷெல்ஸ் இடையேயான நீண்டகால கலாசார உறவுகளை குறிப்பிட்ட பிரதமர் மோடி, பல்வேறு கலாசாரங்களை உள்ளடக்கிய செஷெல்ஸ் நாட்டின் தனித்துவத்தையும் பாராட்டினார்.