

புதுடெல்லி,
உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் இடம்பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.
புதுடெல்லியின் பிரபல சர்வதேச பயண இதழான 'டைம் அவுட்' 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் மிக மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூர் 6- வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. மேலும், அந்தப்பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த ஒரே இந்திய நகரம் ஜெய்ப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் உள்ள 24,000-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட விரிவான கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. நகரங்களின் வாழ்க்கை முறை, சமூக பிணைப்பு, கலாச்சாரம், நேர்மறை ஆற்றல் மற்றும் உள்ளூர் மக்களின் மனநிறைவு ஆகிய காரணிகள் இந்த கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஜெய்ப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகள், துடிப்பான கலாச்சாரம் மற்றும் அங்கு வாழும் மக்களின் மகிழ்ச்சியான அன்றாட வாழ்க்கை முறை ஆகியவை இந்த உலகளாவிய அங்கீகாரத்திற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இப்பட்டியலில் இங்கிலாந்தின் 'பாத்' நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.