

புதுடெல்லி,
நாங்கள் திரும்பி போக மாட்டோம். இனி அமைதியாகவும் இருக்க மாட்டோம். ஜூலை 20-ம் தேதி போலீஸ் எங்களை எப்படி நடத்தினார்கள் என்பதை கண்கூடாக பார்த்தோம் நாங்கள் எந்த எப்.ஐ.ஆர் பார்த்தும் பயப்பட மாட்டோம். எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் கோடிக்கணக்கானவர்கள் டெல்லியில் குவிவார்கள் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி செய்தித்தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில், 'கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி' (CJP) இன்று (புதன்கிழமை) தனது கோரிக்கைகளின் பட்டியலை விரிவுபடுத்தி உள்ளது.
இதுதொடர்பாக போராட்டக் களத்தில் பேசிய ரங்கா, தற்போது இந்தப் போராட்டம் நான்கு கோரிக்கைகளை முன்வைப்பதாகக் கூறினார்:
இதன்படி,
- சோனம் வாங்சுக்கை விடுவித்தல்,
- மத்தியக் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகுதல்,
- தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்குதல், மற்றும்
- ஜூலை 20ம் தேதி அன்று நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெறுதல்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
போராட்டத்தை ஒடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது மேலும் வலுவடைந்ததாக ரான்கே குறிப்பிட்டார். "நாங்கள் போராட்டத்தைத் தொடங்கி இன்றுடன் 32 நாட்கள் ஆகின்றன. இந்நாட்டு மாணவர்களுக்குப் போராடத் தெரியாது என்று கூறுபவர்கள் இதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
காவல்துறை நடவடிக்கை மற்றும் கூடாரங்கள் அமைப்பதற்கான கட்டுப்பாடுகளுக்குப் பிறகு போராட்டம் பலவீனமடைந்துவிடும் என்று அதிகாரிகள் நினைத்தனர். ஜூலை 20 அன்று மாணவர்களைத் தாக்கினால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று அவர்கள் நினைத்தார்கள். கூடாரங்கள் அமைக்க அனுமதிக்காவிட்டால் போராட்டம் முடிந்துவிடும் என்றும் அவர்கள் கருதினார்கள். ஆனால், இந்தப் போராட்டம் நூறு மடங்கு பெரிதாகியுள்ளது.
அமைதியான முறையில் போராடியும் தாங்கள் குறிவைக்கப்படுவதாகப் பலர் கவலைப்பட்டனர். அமைதியான போராட்டக்காரர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம். உங்களை எல்லாம் கைது செய்வதற்கு முன்பாக நாங்களே கைது செய்யப்படுவோம்
அரசின் ஆணவத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான போராட்டம் இது. ஜூலை 20 அன்று டெல்லி காவல்துறை நடந்துகொண்ட விதத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்தார்கள்.எங்களை 'கரப்பான் பூச்சி' என்றும் 'வைரஸ்' என்றும் அழைத்த அதே அரசாங்கத்தை நாங்கள் பணிய வைத்துள்ளோம். இப்போது மக்கள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறார்கள். இது எங்கள் போராட்டத்தின் வெற்றி
இவ்வாறு அவர் கூறினார்.