

அயோத்தி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். இதன் கட்டுமானப் பணிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த பணிகள் வரும் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிபார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்காக, காபூல் நதி நீரை ஆப்கானிஸ்தான் சிறுமி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியிருந்தார். அந்த காபூல் நதி நீரையும், கங்கை நதி நீரையும் நேற்று அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பகுதியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வழங்கினார்.
முன்னதாக இதுதொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு பெண்களின் சுதந்திரம் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தி கோவிலுக்காக காபூல் நதி நீரை அனுப்பிய சிறுமியின் செயல் பாராட்டுக்குரியது. அயோத்தி கோவில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மதத்தினரும் இக்கோவிலுக்கு ஆதரவாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திவருகின்றனர் என்று கூறினார்.