

புதுச்சேரி,
இந்தியாவின் 80-ம் ஆண்டு சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அரசு அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், புராதண கட்டிடங்கள் உள்ளிட்டவை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகின்றன.
இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் கடல் எல்லையான வங்கக்கடலில் காரைக்கால் போலீசார் தேசிய கொடியுடன் பிரம்மாண்ட படகு பேரணி நடத்தினர். கடலோர காவல் படை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில், 50-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் தேசிய கொடிகளை ஏந்தி, அரசலாறு முகத்துவாரத்தில் இருந்து சுமார் 20 கடல் மைல் தூரம் வரை பேரணியாக சென்றனர்.
மாநில டி.ஐ.ஜி. சத்யா சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலில் கம்பீரமாக அணிவகுத்துச் சென்ற போலீசாரை கண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள், கடற்கரையில் தேசிய கொடிகளை அசைத்து போலீசாருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.