

பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பசப்பா என்ற விவசாயி வாழ்ந்து வந்தார். கிருஷ்ணா நதிக்கரையில் இவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. கர்நாடக அரசின் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டமான 'மேல் கிருஷ்ணா திட்டத்தின் கீழ், கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையால் பசப்பாவின் 4 ஏக்கர் விவசாய நிலமும் நீரில் மூழ்கியது.
அணை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, அரசு விதிமுறைப்படி அவருக்கு உடனடியாக மாற்று நிலமோ அல்லது பண இழப்பீடோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 10 ஆண்டுகள் கடந்தும் அதிகாரிகள் அவருக்கு இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்துள்ளனர்.
பலமுறை அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்து ஏமாற்றமடைந்த பசப்பா, சம்பவத்தன்று பாகல்கோட் நகர் மேம்பாட்டு ஆணைய அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு தூய்மை பணியாளர்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த முதலாம் பிரிவு எழுத்தரிடம் தனது இழப்பீடு குறித்து கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அதனை தொடர்ந்து அந்த விவசாயி அதிகாரியை செருப்பால் தாக்கினார். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.