

பெங்களூரு,
நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கர்நாடக அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்தார். கட்சி நிர்பந்திக்கவில்லை என்றும் சொந்த முடிவில் பதவி விலகுவதாகவும் கண்ணீருடன் அவர் பேட்டி அளித்தார்.
திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறையை கையாண்டு வந்த நாகேந்திரா, பா.ஜ.க.வின் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், வால்மீகி முறைகேடு விவகாரத்தில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் மறுத்தார். தான் கட்சியின் மேலிடத் தலைவர்களைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்ததாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எதிர்க்கட்சியினர் என் மீது சுமத்தும் தேவையற்ற குற்றச்சாட்டுகளால் என் கட்சிக்கு ஏற்படக்கூடிய தர்மசங்கடத்தைத் தவிர்க்கவே, நான் எனது விருப்பத்தின் பேரில் பதவி விலகுகிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று எனது முதல்-அமைச்சரும் நம்புகிறார். வளர்ச்சிப் பணிகளுக்கோ அல்லது முதல்-அமைச்சரின் தொலைநோக்கு பார்வைக்கோ எந்த தடையும் ஏற்படக்கூடாது. பாஜக என்னை ஒரு குற்றவாளியாகச் சித்தரிப்பதன் மூலம், ஒரு நிரபராதியை குற்றவாளியாக்கியுள்ளது" என்று தெரிவித்தார்.
அமைச்சர் நாகேந்திரா அரசாங்க பதவியிலிருந்து விலகுவது இது இரண்டாவது முறையாகும். கர்நாடகப் பழங்குடியினர் நல வாரியத்துடன் தொடர்புடைய ரூ. 94 கோடி நிதி முறைகேடு விவகாரத்தில் இவரது பெயர் அடிபட்டதைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டில் சித்தராமையா அமைச்சரவையிலிருந்து பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த இவர் ஏற்கனவே விலகியிருந்தார். பின்னர் தற்போதைய முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
முன்னதாக வால்மீகி ஊழல் விவகாரம் தொடர்பாக நாகேந்திரா பதவி விலகக் கோரி, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ராய்ச்சூரிலிருந்து பல்லாரி வரை 170 கி.மீ. தூரத்திற்குப் பாதயாத்திரை மேற்கொள்ளவிருப்பதாக பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சியான ஜனதா தளம் (எஸ்)-ம் அறிவித்துள்ளநிலையில், நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.