காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

கைதான 3 பேரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.
காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
Published on

உடுப்பி,

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் பிரமுகர் கொலை

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் படுபித்ரி அருகே முதரங்கடி பகுதியை சேர்ந்தவர் டேவிட் டிசோசா. காங்கிரஸ் பிரமுகரான இவர் ஒப்பந்ததாரராகவும் இருந்தார். முதரங்கடியில் அவருக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 3.45 மணிக்கு டேவிட் டிசோசா, தனது அலுவலகத்துக்கு வந்து விட்டு வீட்டுக்கு செல்ல புறப்பட்டார்.

அப்போது காரின் அருகே சென்றபோது, அங்கு வந்த மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மடக்கி பிடித்த போலீசார்

இதுகுறித்து படுபித்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் உடுப்பி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் மர்மநபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் டேவிட் டிசோசா கொலையில் தொடர்புடைய மர்மநபர்கள் 3 பேர் படுபித்ரியில் இருந்து உத்தரகன்னடா மாவட்டம் பட்கல்லுக்கு பஸ்சில் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் பைந்தூர் அருகே ஒட்டினனே பகுதியில் வைத்து அந்த பஸ்சை தடுத்து நிறுத்தினர். இதனை அறிந்த மர்மநபர்கள் 3 பேரும், பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்கள். இதனால் போலீசார் அவர்கள் 3 பேரையும் விடாமல் பின் தொடர்ந்து விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

அப்போது அவர்களில் ஒருவர் காபு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேஜஸ் வியை துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன் அவரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார், தப்பி ஓடிய நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு கீழே விழுந்தார். போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து போலீசார் குண்டுக்காயம் அடைந்த நபரையும், மர்மநபர் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேஜஸ்வியையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் உத்தரபிரதேச மாநிலம் பில்வாவை சேர்ந்த ராஜூ (வயது 42), உத்தரகாண்டை சேர்ந்த அஜய் ரஸ்தோகி (23), பீகாரை சேர்ந்த ஜியா உல்ஷேக் ஆகியோர் என்பதும், அவர்களில் ராஜூவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததும் தெரியவந்தது.

கூலிப்படையா..?

கைதான 3 பேரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com