கர்நாடகா: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கர்நாடகா: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
Published on

மைசூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் சித்தார்த்தா நகரை சேர்ந்தவர் ருக்மணி. இவர் நேற்று முன்தினம் இரவு அந்தப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ருக்மணியின் கழுத்தில் கிடந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

அவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். ஆனாலும் அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ருக்மணி, நஜர்பாத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து நஜர்பாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com