கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம்: மத்திய அரசு விளக்கம்

கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கை மத்திய தொல்லியல் துறைக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம்: மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி,

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பவில்லை என்பது உண்மைக்கு புறம்பான செய்தி என மத்திய கலாச்சார அமைச்சகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளது. அந்த அறிக்கையை பரிசோதித்த வல்லுநர்கள் குழு இதில், சில திருத்தங்களை மேற்கெள்ளுமாறு கீழடி அகழாய்வு குழுவுக்கு மத்திய தெல்லியல் துறை திரும்ப அனுப்பி வைத்தது. இந்த நிலையில், கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு இன்று (மே 29) விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை இரண்டு கட்டங்களாக தொல்லியல் ஆய்வு, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளோடு 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கை இப்போது வரை பொதுவெளியில் வெளியிடப்படாமல் உள்ள நிலையில், அகழாய்வின்போது கண்டறியப்பட்ட தொல்பொருள் சின்னங்கள் தமிழ்நாடு அரசிடமும் ஒப்படைக்கவில்லை. கீழடி அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறை வெளியிட ஆர்வம் காட்டவில்லை என விமர்சனங்கள் எழுகிறது. சமீப தினங்களுக்கு முன்னர், 2023 ஜனவரி மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை மீண்டும் மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. இதற்கு அரசியல் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது இந்திய தொல்லியல் துறையை மோசமாக சித்தரிக்கும் நோக்கம் கொண்டவை.

அகழ்வாராய்ச்சியாளர்களால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அவை பல்வேறு துறை நிபுணர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் அறிக்கைகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துறை வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் அகழ்வாராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக வெளியீட்டிற்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் இவை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் நினைவுக் குறிப்புகளாக வெளியிடப்படுகின்றன.

கீழடி அறிக்கையிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. அதில் அறிக்கை நிபுணர்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதன்படி, கீழடியின் அகழ்வாராய்ச்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் தற்போதுவரை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை.

கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்லியல் துறை ஆர்வம் காட்டவில்லை என்பது ஒரு கற்பனை கதை. இது இந்திய தொல்லியல் துறையை மோசமான கையில் சித்தரிக்கக் கூடிய நோக்கத்தை கொண்டுள்ளது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com