

புதுடெல்லி
டெல்லியின் தென்மேற்கே பாலம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ராம் சவுக் மார்க்கெட் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நேற்று காலை 7.05 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுபற்றி தகவலறிந்து 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்று சேர்ந்தன. போலீஸ், விமான படை போலீஸ், தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த குழுவினரும் உடனடியாக சென்று சேர்ந்தனர். அவர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள். தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது.
எனினும், தீ மளமளவென பரவியதில், 3 சிறுமிகள் உள்பட ஒரே குடும்பத்தின் 9 பேர் பலியானார்கள். தவிர சிறுமி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சப்தர்ஜங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்தினரை, முன்னாள் முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவருடன் அக்கட்சிக்கான டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ், முன்னாள் மந்திரி அதிஷி உள்ளிட்டோரும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இதேபோன்று, தீ விபத்து சம்பவம் நடந்த பாலம் பகுதிக்கும் கெஜ்ரிவால் நேரில் சென்று பார்வையிட்டார்.