

திருவனந்தபுரம்,
சீனா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அங்குள்ள உகான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் கேரள மாணவி ஒருவரையும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய அவர் திருச்சூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இதேபோன்று உகான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மற்றொரு மாணவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் கேரளாவில் உள்ள ஆலப்புழா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதனிடையே, கேரளாவில் 3வது நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காசர்கோடு பகுதியை சேர்ந்த அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். இதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தி உள்ளார்.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை மாநில பேரிடராக முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று அறிவித்துள்ளார்.