கேரளா மீட்புப்பணி: தேசிய பேரிடர் மீட்பு படை சாதனை - 58 அணியினரும் களம் இறங்கினர்

கேரள மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் சாதனை படைத்து வருகின்றனர். #KeralaFloods
கேரளா மீட்புப்பணி: தேசிய பேரிடர் மீட்பு படை சாதனை - 58 அணியினரும் களம் இறங்கினர்
Published on

புதுடெல்லி,

தேசிய பேரிடர் மீட்பு படை 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 58 அணிகளை கொண்டு உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த படையினர் கேரளாவில் மழை, வெள்ள மீட்பு, நிவாரண பணியில் மிகப்பெரிய அளவில் ஈடுபட்டு சாதனை படைத்து வருகின்றனர்.

எந்த ஒரு மாநிலத்திலும் எந்தவொரு இயற்கை பேரிடரிலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் அத்தனை அணியினரும் களம் இறங்கியது கிடையாது. ஆனால் கேரளாவில் 55 அணிகள் களத்தில் உள்ளன. எஞ்சிய 3 அணிகளும் அங்கு விரைகின்றன. ஒவ்வொரு அணியிலும் சுமார் 40 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

கேரளாவில் இந்தப் படையின் மீட்பு பணி பற்றி அதன் செய்தி தொடர்பாளர் நேற்று கூறும்போது, இதுவரை வெள்ள பாதிப்பில் இருந்து 194 பேர் எங்கள் படையினரால் மீட்கப்பட்டு உள்ளனர். 12 விலங்குகளும் மீட்கப்பட்டன. 10 ஆயிரத்து 467 பேர் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். 159 பேருக்கு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு முந்தைய மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று குறிப்பிட்டார்.

டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறை, கேரளாவில் நடைபெற்று வருகிற மீட்பு, நிவாரண பணியினை இரவு, பகலாக கண்காணித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com