

மும்பை,
ஆவணப்படங்கள், குறும்படங்கள், அனிமேஷன் படங்களுக்கான இந்தியாவின் முதன்மைத் திருவிழாவான மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் 19-வது பதிப்பு, பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு மத்தியில், மும்பை தாதரில் உள்ள ரவீந்திர நாட்டிய மந்திர் அரங்கில் நேற்று மாலை தொடங்கியது.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன், விழாவை தொடங்கி வைத்து பேசும்போது, 'பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் ஊடக, பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. 2025-ம் ஆண்டில் 9 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.2.78 லட்சம் கோடியை எட்டியுள்ள இந்தியாவின் ஊடக, பொழுதுபோக்குத் துறை, 2028-ம் ஆண்டுக்குள் ரூ.3.3 லட்சம் கோடியை எட்டும்" என்றார். இந்திய திரைப்படத்துறைக்கு மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக, புகழ்பெற்ற நடிகர் ஜெய்தீப் அலாவத்தை மத்திய மந்திரி கவுரவித்தார்.
விழாவில் மராட்டிய மாநில கலாசாரத்துறை மந்திரி ஆஷிஷ் ஷேலார், தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் சஞ்சல் குமார், பிரசார் பாரதி தலைவர் பிரசூன் ஜோஷி, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.