

ஐதராபாத்,
தெலுங்கானாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் கடந்த மே 12ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வரும் மே 30-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இன்று அறிவித்தார். இதன்படி மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக காய்கறி, மளிகைக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருந்து நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியாளர்கள், மருந்து விநியோகஸ்தர்கள் மற்றும் மருந்தகங்கள், அனைத்து வகையான மருத்துவ மற்றும் சுகாதார சேவைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஊழியர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்படும் மற்றும் அவர்களின் வாகனங்களும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.