

புதுடெல்லி,
எதிர்க்கட்சியினரின் தொடர் முழக்கங்களுக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீவிர முழக்கங்களை எழுப்பியதைத் தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு மீண்டும் கூடிய மக்களவை இன்றைய தினத்திற்கான நடவடிக்கைகளை ஒத்திவைத்தது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் கூச்சல்களுக்கு மத்தியிலும், 'பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா'வை அவை நிறைவேற்றியது. இந்த மசோதாவானது, 1969-ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தை மேலும் திருத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இதற்கிடையே, அவையில் ஒரு முக்கிய மசோதா நிறைவேற்றப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகளை சாடிய மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை மந்திரி கிரென் ரிஜிஜு, “இந்த சட்டத்திற்கான கால அட்டவணை பரஸ்பர ஒப்புதலின் பேரிலேயே தீர்மானிக்கப்பட்டது. சட்டமியற்றும் செயல்பாட்டில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இன்று ஒரு முக்கியமான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இதற்கான நேரம் 'பணி ஆலோசனைக் குழு'வில் (BAC) தீர்மானிக்கப்பட்டது. விவாதம் இன்றி மசோதா ஏன் நிறைவேற்றப்பட்டது என்று நீங்கள் வெளியே சென்று கேட்கக்கூடாது?" என்று அவர் கூறினார்.
மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினரின் தொடர்ச்சியான முழக்கங்களால், அவை ஆகஸ்ட் 3ம் தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஜூலை 20ம் தேதி அன்று நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவையும் இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது.
மேலவையின் நடவடிக்கைகள் இனி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவாரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு, ஜூலை 20ம் தேதி அன்று போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை மந் திரி பதிலளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.