எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மழைக்கால கூட்டத்தொடர்
Published on

புதுடெல்லி,

நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா). சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா கடுமையான அரசியல் விவாதங்களை தூண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், நாடாளுமன்றம் கூடியவுடன் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அமைதி காக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா அறிவுறுத்தினார்.

மக்களவையில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா உரையாற்றிய நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். மேகதாது அணை விவகாரம், நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதைபோல மாநிலங்களவையில் நீட் வினாத்தாள் கசிவு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது பாஜக எம்.பி.க்கள் கார்கேவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாநிலங்களை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆக மொத்தம் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com