

புதுடெல்லி,
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு புகார் வழக்கில் லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது.
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியதோடு, தேடப்படும் நபராக அறிவித்து 'லுக் அவுட்' நோட்டீசையும் பிறப்பித்தனர்.
தனக்கு எதிரான வழக்கையும், லுக்-அவுட் நோட்டீஸையும் ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஜூலை 27-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். அதுவரை மனுதாரருக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது.
லுக்-அவுட் நோட்டீஸ் விவகாரத்தில் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்பு ஜூலை 15-ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” என்று நிபந்தனை விதித்தது. மேலும் லுக்-அவுட் நோட்டீசுக்கு இடைக்காலத் தடையும் விதித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கறிஞர் விருந்தா பண்டாரி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பிரசந்தோ சந்திர சென் ஆஜராகி, முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவை கைது செய்யக் கூடாது என்ற பொருளில் பொதுவான உத்தரவை ஐகோர்ட்டு தெளிவு இல்லாமல் பிறப்பித்துள்ளது. மேல்முறையீடு மனுவை செவ்வாய்கிழமை (நேற்று) விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் தெளிவு பெற ஐகோர்ட்டையே நாடலாம் என்று முதலில் தெரிவித்த தலைமை நீதிபதி, பின்னர் தமிழ்நாடு அரசின் மனுவை புதன்கிழமை (இன்று) விசாரிப்பதாகத் தெரிவித்தார். இதனிடையே, தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் போது, தனது தரப்பு கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று குறிப்பிட்டு எ.வே.வேலு சார்பில் வழக்கறிஞர் டி.குமணன் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செல்லும் என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் எ.வ.வேலு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட வேண்டியதில்லை, எ.வ.வேலு ஒத்துழைப்பார் என்றும் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் உரிய ஆய்வு செய்யாமல் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து எனும் தமிழ்நாடு அரசின் வாதம் சுப்ரீம்கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது.