

மும்பை,
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது.
அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து ஏப்ரல் 14-ம் தேதி இரவு 8 மணி முதல் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடையும். ஆனால், கொரோனா பரவலின் தாக்கம் குறையாததால், மேலும் 15 நாட்கள் பொதுமுடக்கத்தை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக தொற்று பரவல், ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்துவது குறித்த மாநில அரசின் முடிவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப், மராட்டிய மாநிலத்தில் முழு ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதிக்கு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும், கொரோனா பரவலின் ஆபத்தான உயர்வைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.