மராட்டியம்: டாக்டரை தாக்கிய சிவசேனா நிர்வாகி ஜாமீனில் விடுதலை

குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த பின்னரே, ரமேஷ் மராட்டியத்திற்கு திரும்ப முடியும்.
மராட்டியம்
Published on

மும்பை

மராட்டியத்தில் டாக்டரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனா நிர்வாகி ஜாமீனில் விடுதலையானார்.

மராட்டியத்தில் தானே மாவட்டத்தில் உள்ள சாஸ்த்ரி நகர் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 7-ந்தேதி கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்கு சென்றுள்ளனர். அப்போது டாக்டராக சிருஷ்டி பவிஸ்கார் வேலையில் இருந்துள்ளார். இவருடன் டாக்டர் வைபவ் சலுங்கே என்பவரும் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில், அன்றிரவு அந்த மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது.

டாக்டர்களிடம் தகராறு

எனினும், சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என அந்த பெண்ணின் உறவினர்கள் டாக்டர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. அந்த மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லை. இதனால், மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி குழந்தையின் உறவினர்களிடம் பெண் டாக்டர் சிருஷ்டி கூறியுள்ளார்.

ஆனால், அவர்களோ ஆத்திரமடைந்து நாங்கள் தாதாவை கூப்பிடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர். சிறிது நேரத்தில் சிவசேனா (ஷிண்டே அணி) மாநகராட்சி உறுப்பினரான ரமேஷ் மாத்ரே என்பவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

கடுமையான தாக்குதல்

அப்போது பெண் டாக்டர் சிருஷ்டி, மறுபக்கம் திரும்பி மொபைல் போனில் யாருடனோ பேசியபடி இருந்துள்ளார். இதனால், மாத்ரே வந்தபோது அவரை டாக்டர் சிருஷ்டி கவனிக்கவில்லை. அப்போது ஆத்திரத்தில் இருந்த மாத்ரே, பின்னால் இருந்தபடி பெண் டாக்டரை தாக்கினார். இதனால், அவர் கையில் இருந்த போன் கீழே விழுந்தது. அதிர்ச்சியில் அவர் திரும்பினார்.

இதன்பின்னர் ரமேசும், அவருடைய ஆதரவாளர்களும் மற்றொரு டாக்டரான சலுங்கேவுடன் தகராறில் ஈடுபட்டனர். அவர் ஏதோ பேச, அவரை 15-க்கும் மேற்பட்ட முறை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டனர் என கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலானது.

கைது

இந்த சூழலில், மாத்ரேவை போலீசார் கைது செய்தனர். எனினும், அவர் உடல்நல குறைவால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஐகோர்ட்டு ஜாமீன்

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஆண் டாக்டர் பயத்தில் வேலையை ராஜினாமா செய்து விட்டு நகரை விட்டே வெளியேறி விட்டார். இந்த வழக்கில், கல்யாண் பகுதியில் உள்ள ஆதர்வாடி சிறைச்சாலையில் ரமேஷ் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பாம்பே ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து அவர் சிறையில் இருந்து விடுதலையானார்.

இந்த வழக்கை விரைந்து விசாரித்து, குறிப்பிட்ட கால அடிப்படையில் வழக்கு நிறைவு செய்யப்பட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த பின்னரே, ரமேஷ் மராட்டியத்திற்கு திரும்ப முடியும். அதுவரை ஜாமீனில் உள்ள நிபந்தனையின்படி, மராட்டியத்தில் இருந்து வெளியேறி கோவாவுக்கு அவர் சென்றுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com