சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை.. ஜோதி வடிவில் காட்சி தரும் அய்யப்பன்

பொன்னம்பலமேட்டில் சாமி அய்யப்பன், பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார்.
சபரிமலை [திருவனந்தபுரம்],
மண்டல விளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் முடிந்து, டிசம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதி மாலை திறக்கப்பட்டு, பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மகரஜோதி தரிசனம்
இந்நிலையில் சபரிமலையில் முத்தாய்ப்பு நிகழ்வாக இன்று (ஜனவரி 14), மகரவிளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது.
இதையொட்டி கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் சுத்திகிரியை பூஜைகள் நடந்தது. கோவிலில் நேற்று முன்தினம் பிரசாத சுத்தி பூஜைகளும், நேற்று பிம்ப சுத்தி பூஜையும் நடந்தது.
இன்று வழக்கமான பூஜைகளுடன் பிற்பகல் 3.08 மணிக்கு மகர சங்கிராந்தி எனப்படும் மகர சங்கிரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். தந்திரி கண்டரு மகேஷ் மோகன் மற்றும் மேல்சாந்தி இ.டி.பிரசாத் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் இந்த பூஜைகள் நடைபெற உள்ளது.
பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணப் பெட்டி மாலை 6.15 மணியளவில் சன்னிதானத்தை வந்து அடையும். தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் உள்ளிட்டோர் திருவாபரணப் பெட்டியை வரவேற்று, ஏற்றுக் கொள்வார்கள். மாலை 6.40 மணிக்கு திருவாபரணங்கள் சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறும்.
தீபாராதனை நடைபெற்ற ஒரு சில நொடிகளிலேயே பொன்னம்பலமேட்டில் பக்தர்களுக்கு, சுவாமி அய்யப்பன் ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். தொடர்ந்து புஷ்பாபிஷேக வழிபாடுகள் நடைபெறும்.

பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
மகர விளக்கையொட்டி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மலையிலேயே ஆங்காங்கே முகாமிட்டு வருவதால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே மகரவிளக்கு பூஜை நாளில் கூட்ட நெரிசலை தவிர்க்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அன்றைய தினம் காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து மகரஜோதி தரிசனத்துக்கு பின்னரே பக்தர்கள் 18-ம் படி வழியாக செல்லலாம்.
மகரவிளக்கு உற்சவத்தை முன்னிட்டு சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 45,000 ஆக நேற்று குறைக்கப்பட்டது. இன்று மேலும் குறைக்கப்பட்டு 30,000 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் போலீசார் அனுமதித்துள்ள இடங்களை தவிர மற்ற இடங்களில் பக்தர்கள் கூடாரம் அமைத்து ஓய்வு எடுத்து தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அய்யப்ப பக்தர்கள் சமையல் செய்ய கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தக்கூடாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
திருவாபரணப் பொட்டி ஊர்வலம் பாதுகாப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக இன்று திருவாபரணப் பெட்டி வரும் பாதையில் பக்தர்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மகரஜோதி தரிசனம் பார்க்க பெரிய பாதை வழியாக வரும் பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளுக்குள் உணவு சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகரஜோதியை தரிசிக்க உயரமான மரங்களின் மீது ஏறுவது தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பம்பையில் இருந்தே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகள் அனுமதித்த இடங்களில் இருந்து மட்டுமே பக்தர்கள் மகரஜோதியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளுக்குள் சென்று மகரஜோதியை பார்க்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜோதி தரிசனம் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,000 சிறப்பு பஸ்கள் தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகரவிளக்கை முன்னிட்டு அனைத்து முன் ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. மகரஜோதியை காண சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ள பக்தர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. புல்மேடு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து மகர ஜோதியை காண 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடாரம் அமைத்து ஓய்வெடுத்து வருகிறார்கள். மகரவிளக்கையொட்டி இதுவரை 12 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்” என்று கூறினார்.






