உலகக்கோப்பை கால்பந்து: கேரளா, மேகாலயாவை தொடர்ந்து மணிப்பூரும் நாளை விடுமுறை அறிவிப்பு

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை நள்ளிரவில் மாநிலம் முழுவதுமுள்ள மாணவ மாணவிகள் கண்டு களிப்பதற்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என உத்தரவு தெரிவிக்கின்றது.

உலகக்கோப்பை கால்பந்து:  கேரளா, மேகாலயாவை தொடர்ந்து மணிப்பூரும் நாளை விடுமுறை அறிவிப்பு
Published on

இம்பால்

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை காண கேரளா, மேகாலயாவை தொடர்ந்து மணிப்பூரிலும் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அதன் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்று விளையாடிய லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று, காலிறுதி, அரையிறுதி ஆகிய போட்டிகளின் முடிவில், அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த போட்டி இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெறும்.

எனினும், இந்த போட்டி நடைபெறும்போது இந்தியாவில் நள்ளிரவாக இருக்கும். அதனால், போட்டியை பார்க்க ஆர்வம் இருந்தபோதும், நள்ளிரவில் அதனை பார்த்து விட்டு தூங்க சென்றால், மறுநாள் வேலை பாதிக்கப்பட கூடிய சூழல் உள்ளது. இதனாலேயே பலர் போட்டியை பார்க்காமல் தவிர்க்கும் நிலை காணப்படுகிறது.

மணிப்பூர்

இந்த நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை பார்க்க வசதியாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி மணிப்பூர் கல்வி துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டு உளளது. அதில், உயர்நிலை கல்வி வாரியம், சி.பி.எஸ்.இ. அல்லது வேறு எந்த வாரியத்துடனும் இணைந்த அனைத்து பள்ளிகள், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத கல்லூரிகள், உயர்கல்வி மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிற்கும் நாளை (20-ந்தேதி) விடுமுறை என மணிப்பூர் கவர்னர் அறிவித்துள்ளார்.

பிபா போட்டியை நள்ளிரவில் மாநிலம் முழுவதுமுள்ள மாணவ மாணவிகள் கண்டு களிப்பதற்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என்று அந்த உத்தரவு தெரிவிக்கின்றது.

மேகாலயா

இதேபோன்று, மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மா வீடியோ வழியே இன்று வெளியிட்ட அறிக்கையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாநிலத்தில் நாளைய தினம் (திங்கட்கிழமை) விடுமுறை விட முடிவு செய்திருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் நேரலையை மாணவ மாணவிகள் பார்ப்பதற்கு வசதியாக இந்த விடுமுறையை அவர் அறிவித்து உள்ளார். இதனால், நள்ளிரவில் போட்டியை பார்த்து விட்டு, மறுநாள் ஓய்வு எடுத்து கொள்ள முடியும். இதேபோன்று, கால்பந்து ரசிகர்களின் வசதிக்காக ஷில்லாங், ஜோவாய் மற்றும் துரா ஆகிய நகரங்களில் பெரிய அளவிலான தொலைக்காட்சி திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கேரளா

கேரளத்திலும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை முதல்-மந்திரி சதீசன் அறிவித்து உள்ளார். எனினும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய நேரப்படி, நள்ளிரவு 12.30 மணிக்கு போட்டி தொடங்கும். அதை பார்த்துவிட்டு ஓய்வெடுக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

கர்நாடகா

இதேபோன்று, பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பார்ப்பதற்காக பெங்களூரு நகரின் கோரமங்கலா பகுதியில் உள்ள என்.ஜி.வி. உள்ளரங்கில் பெரிய திரை அமைக்கப்பட்டு, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதனை கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் நேரில் கண்டு களிக்கிறார். அவருடன் கால்பந்து ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள், உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் சேர்ந்து பார்க்க உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com