

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.
அந்த வகையில் ரஷ்யாயில் அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துப் பொருட்கள் இன்று இந்தியா வந்தடைந்து உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துப் பொருட்களை ரஷ்ய அரசு அனுப்பி வைத்துள்ளது. ரஷ்யாவில் இருந்து தனிவிமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த மருந்துப் பொருட்கள், இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தன.