

திருவனந்தபுரம்,
கேரளத்தில் வினாத்தாள் விநியோகித்ததில் ஏற்பட்ட குளறுபடியால் அரசு தேர்வாணைய கிளார்க் பணிக்கான தேர்வு பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கேரளம் மாநிலத்தில் அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு மாநில பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10-ம் வகுப்பு தகுதி அடிப்படையிலான கடை நிலை கிளார்க் பணிக்கான தேர்வு நேற்று காலையிலும், மாலையிலும் 2 தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி தேர்வு எழுத ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்று காலையில் ஆர்வமுடன் தேர்வு எழுதி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பாதியில் திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தேர்வர்களிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு தவறு நடந்துள்ளது என கூறி விளக்கம் அளித்துள்ளனர். இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அதே சமயத்தில் தேர்வு ரத்தானதற்கு, அதிகாரிகளின் குளறுபடி காரணமாக வினாத்தாள் கசிவு ஏற்பட்ட அதிர்ச்சி தகவல், பிறகு நடந்த விசார ணையில் வெளியானது. அதாவது. ஆலப்புழாவில் நடந்த ஒரு தேர்வு மையத்தில் பிற்பகலில் நடக்க இருந்த தேர்வுக்கான வினாத்தாளை காலையில் நடந்த தேர்வுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த குளறுபடி காரணமாக மாநிலம் முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜனதா இளைஞரணி, மகளிரணி அமைப்பினர் திருவனந்தபுரத்தில் கேரளம் அரசு பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்வாணைய தலைவர், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கோரி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.