

புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பா.ஜ.க. 303 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக போட்டியின்றி மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து வருகிற 30ந்தேதி பிரதமராக மோடி பதவியேற்கிறார்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல்வேறு நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவரான பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி இன்று சந்தித்துள்ளார்.
முகர்ஜியுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை பதிவிட்டு மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரணாப் முகர்ஜியை சந்திப்பது என்பது எப்பொழுதும் ஊக்கமளிக்கும் அனுபவம். அவரது அறிவு மற்றும் எண்ணங்கள் ஈடு இணையற்றவை. நம்முடைய நாட்டிற்கு அழிக்க முடியாத பங்கை ஆற்றியுள்ள ஒரு ராஜதந்திரி ஆவார் என தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இன்றைய சந்திப்பில் அவரது ஆசியை கோருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் மோடி தலைமையிலான அரசு பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.