

கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என கடந்த 15-ந்தேதி பிற்பகலில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்று மாலை சிலிகுரியில் நடைபெற்ற 15 கிலோமீட்டர் நீள பிரம்மாண்ட வாகன பேரணி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இன்று கவகாளி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், வட வங்காளத்தின் வளர்ச்சி மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் நலன் குறித்து பிரதமர் கூறியதாவது:-
டார்ஜிலிங் உட்பட வட வங்காளத்தின் பெரும்பகுதி, அதாவது இப்பிராந்தியம் முழுவதுமே தேயிலை உற்பத்திக்கு உகந்த ஒரு பகுதியாகும். ஆனால், இரக்கமற்ற திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் இந்த தேயிலை தோட்டங்களையும் அழித்து வருவதை நீங்கள் காண்கிறீர்கள்.
உங்கள் அண்டை மாநிலமான அசாமில், பாஜக அரசாங்கம் தேயிலைத் தோட்டங்களில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தியுள்ளது. தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் அசாமில் பெருமளவிலான பணிகள் செய்துள்ளது.
மேலும், அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நில பட்டாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இங்குள்ள தேயிலை தோட்ட குடும்பங்களின் நலனுக்காக, மேற்கு வங்க பாஜகவும் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
தொழிலாளர் குடும்பங்களுக்கு நில பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும், நிரந்தர வீடுகள், குழாய்வழி குடிநீர், மின்சாரம் மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் ஆகியவை ஏற்படுத்தி தரப்பட வேண்டும்.
சுருக்கமாக சொன்னால், இங்கு அமையவிருக்கும் பாஜக அரசாங்கம், தொழிலாளர்களின் வருமானம், கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் முழுவீச்சில் பணியாற்றும் என்று பிரதமர் மோடி கூறினார்.