

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலை ஒட்டி, தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டம் ஹரிராம்பூரில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:
மால்டா மாவட்டம் மொதாபாரியில் நீதிபதிகளை சிறைபிடித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சியினரும், இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியினரும்தான். இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட வக்கீல் மொபாக் கருல் இஸ்லாமை மாநில சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். பக்டோரா விமான நிலையத்தில் இருந்து தப்ப முயன்ற போது அவர் சிக்கினார். அகில இந்திய மஜ்லிஸ் கட்சியில் இருந்து அவரை கடனாக பெற்று, பா.ஜனதாவினர் இங்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்திய மதச்சார்பற்ற முன்னணி, இடதுசாரி கூட்டணியில் உள்ளது. காங்கிரசும், பா.ஜனதாவும் இச்சம்பவத்தை தூண்டிவிட்டுள்ளன. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வைத்து இந்த சட்டசபை தேர்தலை ஏன் நடத்த முடியாது? அதில் ஊடுருவல்காரர்கள் பெயர்கள் இருந்தால், பிரதமர் மோடியும் அவர்களது வாக்குகளால்தான் வெற்றி பெற்றுள்ளார். அவர் முதலில் ராஜினாமா செய்ய வேண்டும்.
சி.ஆர்.பி.எப். வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறது. உரிய நேரத்தில் அதை அம்பலப்படுத்துவேன். அமித்ஷா மேற்கு வங்காளத்துக்கு வந்தால், பா.ஜனதாவின் வாக்கு வங்கி குறையும். இவ்வாறு அவர் பேசினார்.