சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: டி.கே. சிவகுமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி - டெல்லி நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், டி.கே. சிவகுமாரின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: டி.கே. சிவகுமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி - டெல்லி நீதிமன்றம் உத்தரவு
Published on

புதுடெல்லி,

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டவருமான டி.கே.சிவக்குமார் வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது.

இதுகுறித்து அமலாக்கத்துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்ய கோரிய அவரது மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் ஆஜரானார்.

அவரிடம் 4 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 4-வது நாள் விசாரணையின் முடிவில், அதாவது கடந்த 3-ந் தேதி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். டெல்லி கோர்ட்டு முதலில் டி.கே.சிவக்குமாருக்கு 9 நாட்கள் போலீஸ் காவல் வழங்கியது. கடந்த 13-ந் தேதி டெல்லி கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு போலீஸ் காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமார் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜாமீன் மனு தொடர்பாக இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் நீதிபதி அஜய் குமார் குஹார் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அவரது உடல் நிலை குறித்து வழக்கறிஞர் எழுப்பிய கவலையை அடுத்து சில வழிகாட்டுதல்களை அதிகாரிகளுக்கு அறிவித்தார். இதைத்தொடர்ந்து, டி.கே.சிவக்குமார் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com