

மும்பை,
இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. எனவே அந்த நாடுகளில் இருந்து மும்பை வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமை மையங்களிலும், 7 நாட்கள் வீடுகளிலும் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பிரேசில் நாட்டில் இருந்து மும்பை வருபவர்களும் 7 நாட்கள் தனிமை மையங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. 7 நாட்கள் தனிமை மையங்களில் இருந்த பின்னர் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டும் அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
எனினும் அவர்கள் வீடுகளிலும் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அதற்காக அவர்களின் கைகளில் தனிமை முத்திரை குத்தப்படும்.
மும்பை சத்ரபதி விமான நிலையத்திற்கு வந்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்பவர்களுக்கும் இது பொருந்தும். இதேபோல வெளிநாடுகளில் இருந்து மும்பை வந்து, வேறு விமானத்தில் நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு செல்ல விரும்புபவர்களும் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவல்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.