

மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சி.எஸ்.எம்.டி.ரயில் முனையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் மூலம் மும்பையில் வாழும் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதேபோல கர்நாடகம் போன்ற பிற மாநில மக்களும் இந்த ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் மின்சார ரெயில் சேவையை மேம்படுத்து வதற்காக மும்பை- நாகர்கோவில் உள்ளிட்ட சில ரெயில்களை எல்.டி.டி. ரயில் நிலையத்தில் இருந்து இயக்க மத்திய ரெயில்வே முடிவு செய்தது. ரெயில்வேயின் இந்த முடிவுக்கு அங்குள்ள பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ரெயில்வே நிர்வாகம் தமிழக பயணிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
இந்தநிலையில் நேற்று மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் எல்.டி.டி.யில் இருந்து புறப்பட்டு சென்றது. முதல் நாளான நேற்று பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எல்.டி.டி. ரெயில் நிலையம் வந்து நாகர்கோவில் ரெயிலை பிடித்தனர். குறிப்பாக மேற்கு புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.