அரசியல் வன்முறைக்கு பலியான தொண்டர்களுக்கு தர்ப்பணம் வழங்கிய பா.ஜ.க.

மேற்கு வங்காளத்தில் அரசியல் வன்முறைக்கு பலியான பா.ஜ.க. தொண்டர்களுக்காக அக்கட்சியின் செயல் தலைவர் இன்று தர்ப்பணம் வழங்கினார்.
அரசியல் வன்முறைக்கு பலியான தொண்டர்களுக்கு தர்ப்பணம் வழங்கிய பா.ஜ.க.
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த சில வருடங்களாக பா.ஜ.க. வளர்ச்சி அடைந்து வருகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட அக்கட்சி முந்தைய தேர்தலை விட அதிக தொகுதிகளை கைப்பற்றியது.

இதன்பின் ஆளுங்கட்சியில் இருந்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்தது. குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என்று அக்கட்சி குற்றச்சாட்டு கூறியது. அங்கு இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி, அடிதடியில் ஈடுபடுவது அடிக்கடி நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் அதிக அளவிலான உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.

இந்த நிலையில், அரசியல் வன்முறையில் உயிரிழந்த பா.ஜ.க.வை சேர்ந்த 80 தொண்டர்களுக்காக பாக்பஜார் காட் பகுதியில் இன்று பெரிய அளவில் தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க. மாநில தலைவர் திலீப் கோஷ் மற்றும் தேசிய பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா உள்ளிட்டோருடன் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com