

புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து ரூ.11,700 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மற்றும் அவரது தொழில் கூட்டாளியும், உறவினருமான மெகுல் சோக்ஷி ஆகியோர் வெளிநாடு தப்பி சென்று விட்டனர். அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவரும் இந்த அமைப்புகள், அதற்கு வசதியாக இருவரின் பாஸ்போர்ட்டுகளையும் முடக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்தன. அதன்படி இருவரின் பாஸ்போர்ட்டுகளை கடந்த 16ந்தேதியில் இருந்து 4 வாரத்துக்கு ரத்து செய்திருந்த அமைச்சகம், இது தொடர்பாக பதிலளிக்க ஒரு வாரம் அவகாசமும் இருவருக்கும் வழங்கியது. ஆனால் இது தொடர்பாக மோடி, சோக்ஷி இருவரும் பதிலளிக்கவில்லை.
எனவே அவர்களது பாஸ்போர்ட்டுகளை முடக்கி வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமலாக்கத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ள வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், இந்த விவகாரத்தில் விசாரணை நிறுவனங்களின் அறிவுரையின் பேரில் எதிர்கால நடவடிக்கைகள் இருக்கும் என்றும் கூறினர்.