

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னாள் முதல்மந்திரி உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி புறக்கணித்து உள்ளது. ஆனால் இந்த கட்சியை சேர்ந்த முஸ்தாக் அகமது வானி, நசிர் அகமது வானி ஆகிய தொண்டர்கள் இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்கள் இருவரும் நேற்று காலையில் ஸ்ரீநகர் அருகே நின்ற போது துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் சிலர், முஸ்தாக் மற்றும் நசிர் உள்ளிட்டோர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினர். இதில் இந்த இருவர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் முஸ்தாக் மற்றும் நசிர் ஆகியோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தலை தேசிய மாநாடு கட்சி புறக்கணித்த நிலையில், இவர்கள் இருவரும் போட்டியிட முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது. மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பி ஓடியவர்களை பிடிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.