

புதுடெல்லி,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான பிரதான தேர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறும் என ஏற்கனவே மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவித்து இருந்தது.
இந்த சூழலில் நாடு முழுவதும் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பல மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதனால் சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வுகள் நடைபெறுமா? என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் காணப்பட்டன.
இதற்கு விடையளிக்கும் வகையில் நேற்று முன் தினம் யு.பி.எஸ்.சி. நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்தவகையில் சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த தேர்வுகளை எழுதுவோருக்கும், தேர்வு கண்காணிப்பு அதிகாரிகளுக்கும் எந்தவித தடங்கலும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.
தேர்வர்களுக்கான எலக்ட்ரானிக் அனுமதிச்சீட்டு மற்றும் தேர்வு அலுவலர்களின் அனுமதிச்சீட்டு ஆகியவற்றை போக்குவரத்துக்கான அனுமதி அட்டையாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு யு.பி.எஸ்.சி. கேட்டுக்கொண்டு உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் திட்டமிட்டபடி யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் இன்று தொடங்குகிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான தேர்வுகள் 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது
இதனிடையே தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. யுபிஎஸ்சி தேர்வு எழுத செல்பவர்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.