

புதுடெல்லி,
டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நமது மாணவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர்கள் அமைதியான முறையில் போராடுகிறார்கள்; தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். நியாயமான ஒரு கல்வி முறையை கேட்க அவர்களுக்கு உரிமை உண்டு. நீட் தேர்வு பல மாணவர்களின் உயிரை பறித்துள்ளது. நீட் தேர்வால் மாணவர்கள் அளவற்ற மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். கடைசி நிமிடத்தில் வினாத்தாள் கசிந்துவிட்டது என்று அவர்களிடம் கூறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. வினாத்தாள் கசிவால் 5 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு பயிற்சிக்காக ஆண்டுக்கு 1.32 லட்சம் கோடியை மக்கள் செலவழிக்கின்றனர். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மோடி அரசு இதுவரை ஒருவருக்கு கூட தண்டனை பெற்றுத் தரவில்லை. ஒருவர்கூட சிறைக்கு செல்லவில்லை.
நீட் வினாத்தாள் கசிவு என்பதை மத்திய அரசு எளிதாக அணுகக் கூடாது. முறைகேடுகளை அரசு தடுக்க வேண்டும். மத்திய கல்வி மந்திரியாக தர்மேந்திர பிரதான் தோல்வியடைந்து விட்டார். அவர் பதவி விலக வேண்டும் என்பது 100 சதவீதம் நியாயமனாது. கல்வி அமைப்பை சீரழித்த தர்மேந்தி பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை ஆதரிக்கிறோம். நீட் தேர்வு கல்வி அமைப்பை சீரழிக்கிறது. நமக்கு தேவை வெளிப்படையான, நியாயமான கல்வி அமைப்பு. இவ்வாறு அவர் கூறினார்.