

புதுடெல்லி
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 16-ந்தேதி ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி தொடங்கியது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மாநாடு 20-ந்தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார்.
பிரதமர் மோடியின் அழைப்பையேற்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா நாட்டு ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகை தந்தனர்.
உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற கூடிய முதல் உச்சி மாநாடு என்ற அளவில் அது பெருமையை பெற்றுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டின்போது, இளைஞர் காங்கிரசார் சிலர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாண கோலத்தில் சென்று போராட்டம் நடத்தினர்.
இதுபற்றிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான நிஷிகாந்த் துபே கூறும்போது, காங்கிரஸ் கட்சியை சாடும் வகையில் பேசினார். அவர் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பற்றியும் குறிப்பிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவர் கூறும்போது நேரு, உலகத்திற்கு பொதுவாக நாகினி ஆட்டம் காண்பிக்கும் வழக்கம் கொண்டவர். ஆனால், பிரதமர் மோடியோ தொழில் நுட்பம் மற்றும் ஏ.ஐ. ஆகியவற்றை உலகத்திற்கு காட்டினார் என்றார்.
இதுபோன்ற முரண்பாடு இயற்கையாகவே கோபம் ஏற்படுத்தும் என கூறினார். இதனை தொடர்ந்து, 1962-ம் ஆண்டு அப்போது அமெரிக்க ஜனாதிபதியான ஜான் எப். கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடி இந்தியாவுக்கு வந்தபோது அவரை நேரு வரவேற்ற புகைப்படங்களை நிஷிகாந்த் துபே சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.